போலீஸார் என்னை மிரட்டுகின்றனர்: நடிகர் ரன்வீர் ஷோரி வேதனை

போலீஸார் எனது காரைப் பறிமுதல் செய்து என் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துவிடுவோம் என மிரட்டுவதாக பாலிவுட் நடிகர் ரன்வீர் ஷோரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐஏஎன்எஸ் நிறுவனத்திடம் அவர் கூறியதாவது:

''5 நாட்களுக்கு முன்னால், என் வீட்டில் பணிபுரியும் வினோத் என்பவரின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனை செல்லவேண்டியிருந்தது. பிரசவம் முடிந்து அவர் மனைவி வீடு திரும்பியது அவர் எங்கள் வீட்டுக்கு மீண்டும் வரவேண்டியிருந்தது. அவரிடம் வாகனம் இல்லாததால் நான் என்னுடைய காரை அனுப்பி வைத்தேன். அவர் எங்கள் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது என்னுடைய காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது நான் காவல் நிலையத்தில் இருக்கிறேன்.

என் கார் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்து, வினோத் மனைவிக்குக் குழந்தை பிறந்திருப்பதையும் போலீஸாரிடம் எடுத்துக் கூறினேன். ஆனால் அங்கு பொறுப்பில் இருந்த காவலர் ‘பிரசவத்துக்கு எதற்கு தந்தை? தாயும், மருத்துவரும் மட்டும் இருந்தால் போதுமே? என்று கேட்டார். அதற்கு நான் ‘மருத்துவமனையில் இருந்து தாயையும் சேயையும் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவதற்கும், ஆவணங்களில் கையெழுத்திடவும் அவர் அங்கு இருக்க வேண்டும்’ என்று பதிலளித்தேன்.

அதற்கு அவர் ‘குழந்தையைப் பெற்றெடுப்பது என்ன மருத்துவ அவசரமா?’ என்று திருப்பிக் கேட்கிறார். இவர்களிடம் என்ன பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. என் காரைப் பறிமுதல் செய்து என் மீது எஃப்ஐஆர் பதியப்போவதாக என்னை மிரட்டுகிறார்கள். நான் கடந்த 5 மணி நேரமாக இங்கு இருக்கிறேன். என் அப்பா ஒரு புற்றுநோயாளி. அவர் வீட்டில் தனியாக இருக்கிறார். ஒரு நாள் முழுவதும் கடந்து விட்டது. அடுத்த என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

வினோத்திடம் கார் இல்லாததால் என் காரை அனுப்பி அழைத்து வரச் செய்தேன். நான் இதில் ஏதாவது தவறு செய்துள்ளேனா? இதற்கு ஏன் என்னை அதிகாரத்தில் இருக்கும் இவர்கள் துன்புறுத்துகிறார்கள்? நான் எந்தச் சட்டத்தை மீறினேன் என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்''.

இவ்வாறூ ரன்வீர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE