ஜப்பானில் 'முத்து' படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதன் பின்னணி: கே.எஸ்.ரவிகுமார் பகிர்வு

By செய்திப்பிரிவு

ஜப்பானில் 'முத்து' படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதன் பின்னணி குறித்து கே.எஸ்.ரவிகுமார் பகிர்ந்துள்ளார்

1995-ம் ஆண்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'முத்து'. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் மீனா, சரத்பாபு, ராதாரவி, செந்தில், வடிவேலு, ஜெயபாரதி, சுபஸ்ரீ, விசித்ரா, ரகுவரன் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்திருந்தனர்.

கவிதாலயா நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தில் உள்ள சுவாரசியம் என்னவென்றால், ஜப்பானில் இந்தப் படம் மிகப்பெரிய ஹிட். இந்தப் படத்துக்குப் பிறகு வெளியான எந்தவொரு இந்தியப் படமும் இதன் அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை.

'முத்து' படத்தின் வெற்றி, ரஜினிக்கு அதிகமான ஜப்பான் ரசிகர்களையும் சேர்த்தது. ரஜினியின் ஒவ்வொரு படம் வெளியாகும் போது, தமிழ்நாட்டுக்கு வந்து முதல் காட்சி பார்க்கும் ரசிகர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த கே.எஸ்.ரவிகுமார் - ஆரவ் நேரலையில் கலந்துரையாடலில், கே.எஸ்.ரவிகுமாரிடம் ஆரவ் 'முத்து' படம் ஜப்பானில் மிகப்பெரிய வெற்றியடைந்தது குறித்து கேள்விகள் எழுப்பினார். அதற்கு கே.எஸ்.ரவிகுமார் கூறியதாதவது:

"4 வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் ஜப்பான் போயிருந்தேன். அப்போது கூட 'இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரு' என்று கேட்டார்கள். 'முத்து' படத்தைப் பார்த்துவிட்டு, அது அவர்கள் ஊரின் படம் போல் உள்ளது என்றார்கள். எங்கள் ஹீரோ மாதிரி ஆகிட்டார் ரஜினி சார் என்று சொன்னார்கள். ஜப்பானில் சென்டிமெண்ட் அதிகம். அதில் ரஜினி ராஜாவாக வரும் கதாபாத்திரத்தை ரொம்பவே வியந்து பார்த்தார்கள். அப்புறம் ரஜினி சாருடைய ஸ்டைல் எல்லாமே அங்குள்ள மக்களைக் கவர்ந்தது"

இவ்வாறு கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE