போனி கபூர் வீட்டில் பணியாளராக உள்ள சரணுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். இவர் மறைந்த நடிகர் ஸ்ரீதேவியின் கணவர். இவரது மகள் ஜான்வி கபூர் தற்போது இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
கரோனா அச்சுறுத்தலால் தனது மகளுடன் வீட்டில் இருந்தார் போனி கபூர். தற்போது க்ரீன் ஏக்கர்ஸ், லோகாந்த்வாலா காம்ப்ளெக்ஸில் இருக்கும் தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டில் பணியாளராக இருந்துவரும் 23 வயதான சரண் சாஹு என்பவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக போனி கபூர் தெரிவித்துள்ளார். சரண் சனிக்கிழமை மாலை உடல்நலம் சரியில்லாமல் இருந்தார்.
கபூர் அவரை பரிசோதனைக்கு அனுப்பிவிட்டுத் தனிமைப்படுத்தினார். பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு அது மும்பை மாநகராட்சிக்கு தெரிவிக்கப்பட்டன. உடனடியாக மாநகராட்சி மற்றும் அரசு அதிகாரிகள், சரணை தனிமைப்படுத்தும் மையத்தில் அனுமதிக்க வேண்டிய வழிமுறைகளைத் தொடங்கியுள்ளனர்.
தனது வீட்டின் பணியாளருக்கு கரோனா தொற்று இருப்பது தொடர்பாக போனி கபூர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"நான், என் மகள்கள் வீட்டிலிருக்கும் மற்ற பணியாளர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறோம். யாருக்கும் எந்த அறிகுறிகளும் இல்லை. ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து நாங்கள் யாரும் வீட்டை விட்டு நகரவில்லை.
நடவடிக்கை எடுத்த மகாராஷ்டிர அரசுக்கும், மும்பை மாநகராட்சிக்கும் நன்றி. மும்பை மாநகராட்சி மற்றும் அதன் மருத்துவக் குழு தந்துள்ள அறிவுறுத்தல்களை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுவோம். சரண் விரைவில் குணமடைந்து எங்கள் வீட்டுக்குத் திரும்புவார் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்"
இவ்வாறு போனி கபூர் தெரிவித்துள்ளார்.
'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து தமிழில் அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தை போனி கபூர் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.