முட்டாள்தனமான வதந்திகள்; ஏன் இவ்வளவு ஆர்வம்: வரலட்சுமி சாடல்

தனது திருமணம் தொடர்பாகப் பரவிய வதந்திக்கு வரலட்சுமி சரத்குமார் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். தற்போது தமிழில் 'காட்டேரி', 'பாம்பன்', 'சேஸிங்', 'டேனி', 'பிறந்தாள் பராசக்தி' ஆகிய படங்களிலும், தெலுங்கில் 'க்ராக்' மற்றும் கன்னடத்தில் 'ரணம்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் வரலட்சுமி.

வரலட்சுமிக்குத் திருமணம் என்று பலமுறை வதந்திகள் வெளியாகியுள்ளன. விஷாலைக் காதலித்து வந்தார். ஆனால், அந்தக் காதல் கைகூடவில்லை. விஷாலுக்கு ஆந்திராவைச் சேர்ந்த அனிஷா என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

தற்போது வரலட்சுமி, சந்தீப் என்ற தொழிலதிபரைக் காதலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தக் காதலுக்கு இருவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துவிட்டதால் விரைவில் திருமணம் இருக்கும் என்று செய்திகள் வெளியாகின.

இந்தச் செய்தி தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"எனக்குத் திருமணம் என்ற விஷயம் ஏன் எனக்கு மட்டும் கடைசியாகத் தெரிகிறது? அதே முட்டாள்தனமான வதந்திகள். என் திருமணத்தில் ஏன் எல்லாரும் ஆர்வமாக இருக்கிறார்கள். எனக்குத் திருமணம் என்றால் நான் அதை என் கூரை மீது ஏறி அறிவிப்பேன். இதைப் பற்றி எழுதும் அனைத்து ஊடகங்களுக்கும். எனக்குத் திருமணம் இல்லை. நான் சினிமாவுக்கு முழுக்குப் போடவில்லை"

இவ்வாறு வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE