பணிப்பெண்ணை ஒளிப்பதிவாளர் ஆக்கிய சாந்தனு

By செய்திப்பிரிவு

தனது வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணை, குறும்படத்துக்கு ஒளிப்பதிவாளராக்கியுள்ளார் சாந்தனு.

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தலால் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் எதுவுமே இல்லாததால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது, வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது போன்ற விஷயங்களை வலியுறுத்தி பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிட்டு வருகின்றனர்.

இதனிடையே வீட்டிலிருந்தவாறு 'கொஞ்சம் கரோனா கொஞ்சம் காதல்' என்ற குறும்படத்தை எழுதி, இயக்கி வெளியிட்டுள்ளார் சாந்தனு. இதில் அவரும், அவரது மனைவி கீர்த்தியும் நடித்துள்ளனர். முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படத்துக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்தக் குறும்படத்தைப் பார்த்த பலருக்கும், ஒளிப்பதிவாளர் இடத்தில் யுவஸ்ரீ என்ற பெண்ணின் பெயர் இருந்தது. யார் இவர் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அப்போது ஒளிப்பதிவாளர் யுவஸ்ரீ யார் என்பது குறித்து சாந்தனு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

"யார் அந்த கேமரா பெண்மணி என்று வியக்கும் அனைவருக்கும்... அவர்தான் யுவஸ்ரீ. எங்கள் வீட்டில் இருக்கும் பணிப்பெண். எல்லா இடத்திலும் திறமையானவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் இவ்வுலகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நாம் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். அவருக்கு லைக்குகளை வழங்கி, அவர் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுவோம்".

இவ்வாறு சாந்தனு தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE