வதந்திகளுக்கு மறைமுகமாக முற்றுப்புள்ளி வைத்த ப்ரியா பவானி சங்கர்

காதல் தோல்வி குறித்த வதந்திகளுக்கு மறைமுகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ப்ரியா பவானி சங்கர். 'மான்ஸ்டர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எஸ்.ஜே.சூர்யா - ப்ரியா பவானி சங்கர் இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் பரவின.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது காதலர் ராஜின் பிறந்த நாளுக்கு ப்ரியா பவானி சங்கர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ப்ரியா பவானி சங்கர் தொடர்பான காதல் செய்திகள் அனைத்துமே அடங்கின.

சுமார் ஒரு வாரத்துக்கு முன்பு சித்ரா பெளர்ணமி இரவு அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார் ப்ரியா பவானி சங்கர். அந்தப் பதிவினால் காதல் தோல்வி வதந்தியில் சிக்கினார். இதனால் பலரும் ப்ரியா பவானி சங்கருக்குக் காதல் தோல்வி என்று செய்திகளை வெளியிட்டனர்.

இந்தச் செய்திகள் அனைத்துமே முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மறைமுகமாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ப்ரியா பவானி சங்கர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் தொலைபேசியைப் பார்த்துச் சிரிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, "நம்மைப் பற்றிய வதந்திகளை நாமே படிக்கும்போது" என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவு, காதல் தோல்வி என்று வெளியாகியுள்ள செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கத்தான் என்று ப்ரியா பவானி சங்கருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE