ராஜமௌலியால் உருவாக்கப்பட்ட 'ஆர்.ஆர்.ஆர்' ஒரு அற்புதமான படம்; பிறந்த நாள் கொண்டாடும் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களுக்கு வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

மே 20-ம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் நாளை (மே 20) தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். தற்போது ராஜமெளலி இயக்கத்தில் உருவாகும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் ராம்சரணுடன் இனைந்து நடித்து வருகிறார்.

ஜூனியர் என்.டி.ஆர் பிறந்த நாளுக்கு, 'ஆர்.ஆர்.ஆர்' படத்திலிருந்து அவரது லுக் மற்றும் வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கரோனா ஊரடங்கினால் சாத்தியமில்லை என்று படக்குழு அறிவித்துவிட்டது.

இதனிடையே, தனது பிறந்த நாளை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"என்னுடைய ரசிகர்களுக்கு என்னுடைய இதயப்பூர்வமான வேண்டுகோள். இந்த அற்புதமான நேரத்தில் உங்களையும் உங்கள் அன்புக்குரிய நபர்களின் நலனையும் பாதுகாப்பே முக்கியம். இதை நாம் ஒன்றிணைந்து போராடி இதிலிருந்து வலிமையுடன் வெளியே வரவேண்டும்.

ஒவ்வொரு வருட பிறந்தநாளின் போதும் நீங்கள் காட்டும் அன்பும் அக்கறையும் என் இதயத்துக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. ஆனால் இந்த வருடம் நீங்கள் எனக்கு தரும் மிகப்பெரிய மதிப்புமிக்க பரிசு நீங்கள் உங்கள் வீட்டில் பாதுகாப்புடன் இருப்பது தான்.

'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் பர்ஸ்ட் லுக் அல்லது டீஸர் எதுவும் வராமல் இருப்பது உங்களுக்கு ஏமாற்றமளிப்பது குறித்து நான் அறிவேன். உங்களைப் போலவே படக்குழுவினரும் ஏமாற்றத்தில் உள்ளோம். நம்புங்கள்.

படத்திலிருந்து தரமான ஒரு விஷயத்தை உங்களுக்குக் கொடுக்க அவர்கள் கடுமையாக உழைத்தார்கள். ஆனால் சமூக விலகல் குறித்த அறிவுறுத்தல் மற்றும் விதிமுறைகளால் அவர்களால் முடிக்க முடியவில்லை.

ராஜமௌலியால் உருவாக்கப்பட்ட 'ஆர்.ஆர்.ஆர்' ஒரு அற்புதமான படம், அது உங்களை திருப்திப்படுத்தும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. மீண்டும் உங்கள் அன்புக்கு நன்றி"

இவ்வாறு ஜூனியர் என்.டி.ஆர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE