தனக்கு இந்தி தெரியாததால் பாலிவுட் வாய்ப்பை இழந்ததாகக் கூறியுள்ளார் நடிகை ஆத்மிகா.
'மீசைய முறுக்கு' படம் மூலம் அறிமுகமான ஆத்மிகா தொடர்ந்து 'நரகாசூரன்' படத்தில் நடித்தார். அந்தப் படம் நிதிப் பிரச்சினையால் வெளியாகாமல் உள்ளது. வைபவ், வரலட்சுமியுடன் 'காட்டேரி', உதயநிதியுடன் 'கண்ணை நம்பாதே', விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் 'ராஞ்சனா' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஆத்மிகாவுக்கு வந்தது. ஆனால் இந்தி, தமிழ் என இரண்டும் பேசத் தெரிந்த நடிகை வேண்டும் என்பதால் ஆத்மிகாவால் அதில் நடிக்க முடியவில்லை.
இது தொடர்பாக ஆத்மிகா, "அந்தத் தருணத்தில் அதிகம் வருத்தப்பட்டேன். நான் பாலிவுட் படங்களின் ரசிகை. ஆனால் அந்த மொழியைக் கற்க முடியவில்லை. அதனால் இப்போது ஊரடங்கில் இந்தி கற்று வருகிறேன். 'ஏக் காவ் மே ரகு தாதா' என்கிற அளவுக்கு என் மொழி அறிவு இப்போது மோசமாக இல்லை. என்னால் புரிந்து பதிலளிக்க முடியும்" என்று கூறியுள்ளார்.
மேலும், "நல்ல வாய்ப்புகளுக்காக நான் மகிழ்ச்சியுடன் காத்திருப்பேன். ஒரு வெற்றி கொடுத்துவிட்டு வரிசையாக 4 தோல்விப் படங்களைத் தருவது மோசமானது. அதனால் படங்கள் நடிக்க எவ்வளவு காலம் எடுக்கும் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. நான் இந்தத் துறையில் நீண்ட நாட்கள் இருக்கப் போகிறேன்" என்று ஆத்மிகா பேசியுள்ளார்.