புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை: ஜாவேத் அக்தர் விமர்சனம்

By செய்திப்பிரிவு

புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை என்று பிரதமர் மோடி உரை தொடர்பாக ஜாவேத் அக்தர் தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் தொடர்பாக அறிவிக்கப்பட்ட 3-வது ஊரடங்கு மே 17-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனிடையே நேற்றிரவு (மே 12) 8 மணியளவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இருக்கும் எனப் பலரும் ஆவலுடன் எதிர்நோக்கினர்.

ஆனால், பிரதமர் மோடி தனது பேச்சில் உலக அளவில் கரோனாவின் தாக்கம் குறித்தும், இந்தியாவில் கரோனா தாக்கம் குறித்தும் நீண்ட நேரம் பேசினார். இறுதியாக கரோனா பாதிப்பால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொருளாதார மீட்புக்காக 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். பின்பு 4-வது ஊரடங்கு இருக்கும் எனவும், ஆனால் அதில் பெரும் தளர்வுகள் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் இந்த உரை தொடர்பாக பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

"ரூ.20 லட்சம் கோடி திட்டம் கண்டிப்பாக தேசத்துக்கு ஊக்கம் தரும் ஒன்றுதான். ஆனால் 33 நிமிட உரையில், உயிர் வாழவே உடனடி உதவி தேவைப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இதை ஏற்க முடியவில்லை".

இவ்வாறு ஜாவேத் அக்தர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE