ஊரடங்கு விதிகளை மீறியதாக தன் மீது வழக்குத் தொடரப்பட்டது என்ற செய்தியை பூனம் பாண்டே மறுத்துள்ளார். தான் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, ஊரடங்கு விதிகளை மீறியதாக மாடலும் நடிகையுமான பூனம் பாண்டே மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக செய்திகள் வந்தன. காரணமின்றி மெரைன் ட்ரைவ் பகுதியில் காரில் சுற்றியதால் அவர் மீதும், அவருடன் காரில் பயணம் செய்த நண்பர் சாம் அகமது பாம்பே மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கார் பறிமுதல் செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
இருவர் மீதும் ஐபிசி பிரிவு 269 (உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய நோய்த் தொற்றை பரப்பக்கூடிய வகையில் அலட்சியமாக நடந்து கொண்டது) மற்றும் 188-ன் (அரசு பிரகடனம் செய்துள்ள உத்தரவை மீறுதல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை ஆய்வாளரே குறிப்பிட்டிருந்தார். ஆனால் பூனம் பாண்டே, தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் இதை மறுத்துள்ளார்.
"நேற்று இரவு தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் பார்த்தேன். நான் கைது செய்யப்பட்டதைப் பற்றிக் கேட்க பலர் தொடர்பு கொண்டனர். வேடிக்கையாக இருந்தது. செய்திகளிலும் நான் அதைப் பார்த்தேன். தயவு செய்து என்னைப் பற்றி எழுதாதீர்கள். நான் வீட்டில் நலமாக இருக்கிறேன்" என்று தான் பகிர்ந்துள்ள வீடியோவில் பூனம் பாண்டே குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவுக்கு, "நேற்றிரவு எனது வீட்டில் நான் திரைப்படங்கள் பார்த்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் கைது செய்யப்பட்டேன் என்று கேள்விப்பட்டேன்" எனத் தலைப்பு வைத்துள்ளார்.