25 வருடங்களாக ஆமிர் கானின் உதவியாளராக இருந்தவர் காலமானார்

By பிடிஐ

பாலிவுட் நடிகர் ஆமிர் கானிடம் 25 வருடங்களாக உதவியாளராக இருந்த அமோஸ் என்பவர் மாரடைப்பின் காரணமாக மும்பையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 60.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஆமீர் கானிடம் 25 ஆண்டுகளாக உதவியாளராக இருந்தவர் அமோஸ். நேற்று (மே 12) காலை அமோஸ் மயக்கமடைந்தார். உடனடியாக அவரை ஆமிர் கான், அவரது மனைவி கிரண் ராவ் இருவரும் மும்பையின் ஹோலி ஃபேமலி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஆமிர் கானின் நெருங்கிய நண்பரும், சக நடிகருமான கரீம் ஹஜீ, அமோஸ் பற்றிப் பேசுகையில், "அமோஸ் ஒரு சூப்பர் ஸ்டாருடன் இருந்தார். ஆனால் என்றும் எளிமையாக, அன்பாக இருந்தார். ஆமீரிடம் மட்டுமல்ல, அனைவரிடமும் அப்படித்தான் பழகினார். ஒரு அற்புதமான மனிதர், அற்புதமான மனம் கொண்டவர். புத்திசாலி, கடின உழைப்பாளி. சமீபத்தில்தான் தாத்தாவானார்.

அவருக்குப் பெரிதாக நோய் எதுவுமில்லை. இந்த மரணம் அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் இறக்கும்போது அவர் கால்களில் பூட்ஸ் இருந்தது. அவரைத் தெரிந்த அனைவருக்குமே அவரது மரணம் மிகப்பெரிய இழப்பு. இந்த மரணம் ஆமிர், கிரண் ராவ் இருவரையுமே உலுக்கியுள்ளது. இது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று ஆமிர் எங்களிடம் சொன்னார். அதிர்ச்சியில் ஒரு உணர்ச்சியற்ற நிலைக்கு அனைவரும் சென்றுவிட்டோம். அவரது இழப்பை உணர்வோம்" என்று கூறியுள்ளார். அமோஸுக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

ஆமிர் கான் மற்றும் மனைவி கிரண் ராவ் இருவருமே அமோஸ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE