கார்களின் மேல் நின்று ‘ஸ்டண்ட்’ செய்த காவலருக்கு அபராதம்

நடிகர் அஜய் தேவ்கன் போல கார்களின் மேல் ‘ஸ்டண்ட்’ செய்து வீடியோ வெளியிட்ட மத்தியப் பிரதேச காவலருக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு ‘ஃபூல் ஆர் கான்டே’ திரைப்படம் வெளியானது. இப்படத்தில்தான் நடிகர் அஜய் தேவ்கன் அறிமுகமானார். இப்படத்தில் இரண்டு மோட்டார் பைக்குகளின் மேல் நின்று கொண்டு சவாரி செய்யும் ஒரு காட்சி மிகவும் பிரபலம்.

தற்போது இந்தக் காட்சியில் வருவது போல நிஜத்தில் செய்ததால் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் அபராதம் செலுத்தியுள்ளார்

மத்தியப் பிரதேச மாநிலம், தாமோ மாவட்டம், நரசிங்கர் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக இருப்பவர் மனோஜ் யாதவ். கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘ஃபூல் ஆர் கான்டே’ அஜய் தேவ்கன் போல ஸ்டண்ட் செய்து வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவின் பின்னணியில் ‘சிங்கம்’ படப் பாடல் ஒலிக்க, போலீஸ் உடையில் இரண்டு கார்களின் மேல் ஏறி நின்று கொண்டு சவாரி செய்திருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து மனோஜ் யாதவைக் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், இந்த வீடியோ விவகாரம் குறித்து மேல் அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மனோஜ் யாதவுக்கு ரூ. 5000 அபராதம் விதிக்கப்பட்டு, இனிமேல இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE