மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் அனுமோல். ‘சாயில்யம்’, ‘இவன் மேகரூபன்’, ‘அகம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘கண்ணுக்குள்ளே’ , ‘ராமர்’ உள்ளிட்ட ஒருசில தமிழ்ப்படங்களிலும் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களிலும் அனுமோல் தொடர்ந்து இயங்கி வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் சிலர் தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக அனுமோல் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:
உங்கள் அந்தரங்க புகைப்படங்களை எனக்கு அனுப்புபவர்கள் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். நான் ‘ப்ளாக்’ செய்து சோர்ந்து விட்டேன். அதிலும் ஒருவர் ஏதோ கடவுளின் பரிசு போல தன்னுடைய ஆபாச வீடியோக்களை தொடர்ந்து எனக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
அடுத்த முறை நான் சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகாரளித்து விடுவேன். இதுபோன்ற ஆபாச படங்களை பெண்களுக்கு அனுப்பும் அயோக்கியர்களே, தெரிந்துகொள்ளுங்கள். அது அருவருப்பை தவிர வேறெந்த உணர்வையும் ஏற்படுத்தாது.
இவ்வாறு அனுமோல் கூறியுள்ளார்.
அனுமோல் தற்போது ‘தாமர’ என்ற மலையாளப் திரைப்படத்திலும், ‘ஒபிமானி ஜோல்’ என்ற பெங்காலி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.