பாலசந்தர் மாதிரி ஒரு குருவைப் பார்க்கவே முடியாது: இயக்குநர் வஸந்த் புகழாரம்

பாலசந்தர் மாதிரி ஒரு எளிமையான மனிதர், குருவைப் பார்க்கவே முடியாது என்று இயக்குநர் வஸந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான 10 இயக்குநர்கள் என்று பட்டியலிட்டால், அதில் கண்டிப்பாக இயக்குநர் பாலசந்தர் பெயர் இடம்பெறும். ரஜினியை அறிமுகப்படுத்தியது தொடங்கி, 'சர்வர் சுந்தரம்', 'பாமா விஜயம்', 'எதிர் நீச்சல்', 'இரு கோடுகள்', 'அரங்கேற்றம்', 'அவள் ஒரு தொடர்கதை', 'தப்புத் தாளங்கள்', 'வறுமையின் நிறம் சிவப்பு', 'சிந்து பைரவி' எனப் பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.

இவரிடம் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்தவர்கள் பலரும் இன்றும் முன்னணி இயக்குநர்களாக இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் இயக்குநர் வஸந்த். இந்தக் கரோனா ஊரடங்கில் பிரபல கர்நாடக பாடகி சுதா ரகுநாதனுக்குப் பேட்டியளித்துள்ளார். ஃபேஸ்புக் நேரலைப் பேட்டியாக இது நடந்தது.

இந்தப் பேட்டியில் தனது குருநாதர் கே.பாலசந்தர் குறித்து இயக்குநர் வஸந்த் கூறியிருப்பதாவது:

" 'கேளடி கண்மணி' வெளியானவுடன், பாலசந்தரிடம் என்ன கற்றுக் கொண்டீர்கள் எனக் கேட்டார்கள். நான் 'கேளடி கண்மணி' என்று சொன்னேன். இப்போது கேட்டால் 'சிவரஞ்சனியும் சில பெண்களும்' என்பேன். நான் கற்றுக்கொண்ட அனைத்து விஷயங்களுமே அவரிமிடருந்துதான். அவரை மாதிரி ஒரு எளிமையான மனிதர், குருவைப் பார்க்கவே முடியாது. குரு என்பதால் எதுவும் கற்றுக்கொடுக்க மாட்டார். அவருடைய வேலையை அவ்வளவு சுத்தமாகச் செய்வார். அதைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். I am not interested in Excuses என்று அவருடைய டேபிளில் எழுதி வைத்திருப்பார்.

ஒரு தவறை ஒரு முறை பண்ணினால் ஓ.கே. அதையே இன்னொரு முறை செய்தால் கோபம் வரும் என்றால் அதே தவறை நாம் திரும்பச் செய்தால், நாம் கற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தம். அதுதான் அந்தக் கோபத்துக்குக் காரணம். என்னுடைய பாக்கியம் என்னவென்றால் 35 ஆண்டுகள் ஒருவரிடம் பழக முடிந்தது, இருக்க முடிந்தது. அவருடைய கடைசிக் காலம் வரை கூடவே இருந்து, கங்கா தீர்த்தம் விடும் வரை கூடவே இருந்தேன். அது கடவுளின் அனுக்கிரகம். அவரை நான் பார்க்கவில்லை என்றால் நான் ஒன்றுமே இல்லை. அவர் இறந்த பிறகும் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறார். எனது எல்லா விஷயங்களும் அவரால்தான்".

இவ்வாறு இயக்குநர் வஸந்த் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE