டி-சீரிஸ் ஊழியருக்கு கோவிட் 19 தொற்று உறுதி: அலுவலகத்துக்கு பூட்டு

By ஐஏஎன்எஸ்

மும்பையில் இருக்கும் டி-சீரிஸ் நிறுவனத்தின் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மே 17-ம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. தற்போது கரோனா தொற்று இருப்பதற்கான டெஸ்ட்டை அதிகப்படுத்தி வருகிறது மத்திய அரசு.

இதில் இந்தித் திரையுலகின் முன்னணி நிறுவனம டி-சீரிஸ் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிச் செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் பூஷன் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

"எங்கள் டி-சீரிஸ் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது சமீபத்தில் தெரிய வந்தது. தேசிய ஊரடங்கால் வீடு திரும்ப முடியாத எங்கள் பாதுகாப்புப் பணியாளர்கள், உதவியாளர்கள் சிலர் அலுலவகத்திலேயே தங்கியுள்ளனர்.

டி-சீரிஸ் ஊழியர்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல. இந்த சூழலைக் கையாள அதிக அக்கறை எடுத்துள்ளோம். தொற்று இருப்பவருக்கு ஒழுங்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலை ஏற்று எங்கள் அலுவலக கட்டிடத்தை முழுமையாக கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்துள்ளோம்.

சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக டி-சிரீஸில் நாங்கள் ஊரடங்கு விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றியுள்ளோம். அரசு சொன்னதைப் போல வீட்டிலிருந்தே வேலை செய்து கொண்டிருக்கிறோம். இது போன்ற கடினமான சூழலில் நாங்கள் ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டியிருக்கிறோம்.

இந்த சர்வதேச தொற்று முடிவுக்கு வரும்போது டி-சீரிஸ் குடும்பத்தின் ஒவ்வொரு நபருமே ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்ய கடுமையாக முயற்சி செய்கிறோம்"

இவ்வாறு டி சிரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சூப்பர் கேஸட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பூஷன் குமார் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE