காதலை உறுதி செய்த டாப்ஸி

By செய்திப்பிரிவு

இந்தித் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் டாப்ஸி தனது காதலை உறுதி செய்துள்ளார்.

தமிழில் வெற்றிமாறன் இயக்கிய 'ஆடுகளம்' படத்தின் மூலம் அறியப்பட்டவர் டாப்ஸி. அதற்குப் பிறகு பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வரத் தொடங்கினார்.

2016-ம் ஆண்டு 'பிங்க்' இந்திப் படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார் டாப்ஸி. அதற்குப் பிறகு பல்வேறு இந்திப் படங்களில் நடித்து அங்கும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான 'தப்பட்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது அன்னையர் தினத்துக்காக அளித்த பேட்டியில் தனது காதலை உறுதிப்படுத்தியுள்ளார் டாப்ஸி. அந்தப் பேட்டியில் "நான் எதையும், யாரிடமிருந்து மறைக்க விரும்ப மாட்டேன். என் வாழ்க்கையில் ஒரு நபரின் இருப்பை ஏற்றுக்கொள்வதில் எனக்குப் பெருமை. அதே நேரத்தில் தலைப்புச் செய்தியில் இடம்பெற வேண்டும் என்று அதுபற்றி நான் பேச மாட்டேன். ஏனென்றால் அது நம்பகத்தன்மையை, இவ்வளவு நாள் நான் கடுமையாக உழைத்துச் சேர்த்த நற்பெயரைக் கெடுத்துவிடும்.

என் வாழ்க்கையில் ஒருவர் இருக்கிறார். என் குடும்பத்துக்கு அது தெரியும். என் சகோதரிகள், பெற்றோர்கள் என அனைவருக்கும் நான் யாருடன் இருக்கிறேனோ அவரைப் பிடிக்க வேண்டும். இது எனக்கு மிகவும் முக்கியம். இல்லையென்றால் என்னால் அந்த உறவில் இருக்க முடியாது. இதைப் பற்றி நான், 'என் அம்மா அப்பா மறுத்தால் இது நடக்காது' என நகைச்சுவையாகக் கூடச் சொல்லிக் கொண்டிருந்தேன்" என்று தெரிவித்துள்ளார் டாப்ஸி.

டாப்ஸியின் திருமணம் பற்றிப் பேசியுள்ள அவரது அம்மா, "அவர் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எந்த அழுத்தமும் இல்லை. அது பற்றி நான் சில சமயங்களில் பேசுவேன். ஆனால் எனக்கும் கூட திருமணம் என்ற அமைப்பில் நிறைய நம்பிக்கை இல்லை. எனவே அவருக்கு என்ன வேண்டுமோ அது அவர் விருப்பம்தான்" என்று கூறியுள்ளார்.

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பாட்மிண்டன் வீரர் மதியாஸ் போ தான் டாப்ஸியின் காதலர் என்று பாலிவுட் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE