'க/பெ ரணசிங்கம்' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே

By செய்திப்பிரிவு

'க/பெ ரணசிங்கம்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'க/பெ. ரணசிங்கம்'. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த பெரிய கருப்பத்தேவரின் மகன்தான் இயக்குநர் பெ.விருமாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, 'பூ' ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர்த்து மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். 'நேர்கொண்ட பார்வை' படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில்தான் அவர் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசைக்கோர்ப்புக்காகப் பார்த்துவிட்டு, படக்குழுவினரை அழைத்துப் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக ரங்கராஜ் பாண்டே தனது சமூக வலைதளப் பதிவில், "ஜிப்ரானிடமிருந்து அழைப்பு வந்ததில் மகிழ்ச்சி. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதி இருவரின் அட்டகாசமான நடிப்பை நான் தனிப்பட்ட முறையில் பார்த்தேன். எல்லாப் பெருமைகளும் பெ.விருமாண்டியையும் தயாரிப்பாளரையுமே சேரும்" என்று தெரிவித்துள்ளார்.

ரங்கராஜ் பாண்டேவின் இந்தப் பதிவுக்கு தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷ் அவரது சமூக வலைதளப் பதிவில் "ரங்கராஜ் பாண்டே...உங்களது கதாபாத்திரமும் தனித்து நிற்கும் என்று உறுதியாகச் சொல்வேன். நம் அத்தனை பேரின் முயற்சியையும் மக்கள் பார்க்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் அந்தப் பணிகள் பாதிக்கப்பட்டன. தமிழக அரசு இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதியளித்துள்ளதால் இந்தப் படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE