தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் 'க/பெ ரணசிங்கம்' என்று அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'க/பெ. ரணசிங்கம்'. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த பெரிய கருப்பத்தேவரின் மகன்தான் இயக்குநர் பெ.விருமாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் அந்தப் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராகப் பணிபுரிகிறார் ஜிப்ரான்.
'க/பெ ரணசிங்கம்' படத்தை பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளுக்காகப் பார்த்துவிட்டு இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
"'க/பெ ரணசிங்கம்' பார்த்துவிட்டு, பின்னணி இசைக்கான பணிகளைத் தொடங்குகிறேன். 'அறம்' படத்துக்குப் பிறகு, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் இது. இதில் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி ஆகியோர் அற்புதமாக நடித்துள்ளனர்"
இவ்வாறு இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, 'பூ' ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.