மருத்துவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்: ஷாரூக் கான்

By செய்திப்பிரிவு

கரோனா காலத்தில் அயராது உழைக்கும் மும்பை காவல்துறை மற்றும் மருத்துவர்களின் சேவைக்கு பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் நன்றி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் தினக்கூலித் தொழிலாளர்கள், ஏழைகள், ஆதரவற்றோர் எனப் பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. சமூக ஆர்வலர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆதரவற்றவர்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். காவல்துறை, மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரும் கரோனா வைரஸிலிருந்து மக்களைக் காக்க இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் மும்பை காவல்துறை மற்றும் மருத்துவர்களின் அயராத பணிகளுக்கு நடிகர் ஷாரூக் கான் நன்றி தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''மஹாராஷ்டிர காவல்துறைக்கு நான் உறுதுணையாக இருப்பேன். இந்தக் கடினமான சூழலில் அயராது பாடுபடும் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மற்றும் மும்பை காவல்துறைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைரஸுக்கு எதிராக முன்வரிசையில் போராடி வரும் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோருக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்''.

இவ்வாறு ஷாரூக் கான் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்களுக்கு 25,000 பிபிஇ கிட் எனப்படும் பாதுகாப்பு உபரகணங்களை ஷாரூக் கான் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE