'கோப்ரா' குறித்த வதந்தி: இயக்குநர் முற்றுப்புள்ளி

'கோப்ரா' குறித்த வதந்திக்கு இயக்குநர் அஜய் ஞானமுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி, வேறு எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை. நாளை (மே 11) முதல் தமிழகத்தில் இறுதிக்கட்டப் பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதனால், பல்வேறு படத்தின் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதில் பல்வேறு கெட்டப்களில் விக்ரம் நடிக்க, பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார் லலித். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக, விசா நடவடிக்கைகளில் சில அதிரடி முடிவுகளை எடுத்தது இந்திய அரசு. இதனால் 'கோப்ரா' படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, பாதியிலேயே திரும்பியது படக்குழு.

தற்போது கரோனா ஊரடங்கு முடிந்தாலும், மீண்டும் ரஷ்யாவுக்கு சென்று மீதமுள்ள காட்சிகளை எடுக்க ரொம்பவே தாமதமாகும். இதனால், அந்தக் காட்சிகளை எல்லாம் சென்னையிலேயே க்ரீன் மேட்டில் படமாக்கி கிராபிக்ஸ் செய்து கொள்ளலாம் என்று 'கோப்ரா' படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

இது செய்தியாகவும் வெளியானது. இது உண்மையா என்று பலரும் இயக்குநர் அஜய் ஞானமுத்து சமூக வலைதள கணக்கைக் குறிப்பிட்டுக் கேட்டனர். அதற்கு அஜய் ஞானமுத்து "இல்லை... சாத்தியமில்லை" என்று பதிலளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE