கடவுளே இல்லை எனச் சொல்ல மாட்டேன்: இயக்குநர் ராஜமெளலி

கடவுளே இல்லை எனச் சொல்ல மாட்டேன் என்று இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

'பாகுபலி' படங்களின் வெற்றியால் உலகளவில் பிரபலமான இயக்குநராக மாறியுள்ளார் இயக்குநர் ராஜமெளலி. தற்போது 'இரத்தன் ரணம் ரெளத்திரம்' என்னும் படத்தை இயக்கி வருகிறார். இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், அலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த கரோனா ஊரடங்கில் பல்வேறு முன்னணி இணையதளங்களுக்கு நேரலையில் பேட்டியளித்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி. அதில் ஒரு பேட்டியில் "உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா?" என்ற கேள்விக்கு இயக்குநர் ராஜமெளலி கூறியிருப்பதாவது:

"என்னை நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று அழைக்கலாம். அதற்கென்று குறிப்பிட்ட ஒரு சம்பவம் காரணமல்ல. நான் வளர வளர, சுற்றியிருக்கும் விஷயங்களைக் கவனிக்க ஆரம்பித்த போது, புத்தகங்கள் படிக்க ஆரம்பித்த போது இந்த எண்ணம் வளர்ந்தது.

கடவுள் எங்கும் இருப்பவர், சர்வ வல்லமை படைத்தவர் என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு, இன்னொரு பக்கம் (கடவுளின் பெயரால்) நாம் செய்யும் விஷயங்களைப் பார்க்கும்போது இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது எனது சிந்தனை மட்டுமே. கடவுளே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். என்னால் அதைச் சொல்லவும் முடியாது. ஏனென்றால் அப்படியான கருத்தைச் சொல்ல நான் அவ்வளவு அறிவுஜீவியும் அல்ல, அவ்வளவு முட்டாளும் அல்ல.

நம்மை மீறிய ஒரு பெரிய சக்தி இருக்கிறது. அதுதான் எல்லாம் ஒன்றிணைக்கிறது என்கிற ரீதியில் பேச ஆரம்பித்தால் அது பற்றி எனக்குத் தெரியாது என்றுதான் நான் சொல்வேன். அது என் அறிவுக்கு எட்டாத அதிகபட்சமான சிந்தனை"

இவ்வாறு இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE