ஈகோ வேறு; ஆணவம் வேறு: இயக்குநர் ராஜமெளலி

ஈகோ வேறு, ஆணவம் வேறு என்று இயக்குநர் ராஜமெளலி அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்

'பாகுபலி' படங்களின் வெற்றியால் உலகளவில் பிரபலமான இயக்குநராக மாறியுள்ளார் இயக்குநர் ராஜமெளலி. தற்போது 'இரத்தன் ரணம் ரெளத்திரம்' என்னும் படத்தை இயக்கி வருகிறார். இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், அலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. பல்வேறு முன்னணி நடிகர்கள் இவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என ஆர்வத்துடன் உள்ளனர்.

இதனிடையே தனது படத்தில் நடிக்க யாரேனும் மறுத்தால் ஈகோ பாதிக்குமா என்ற கேள்விக்கு ராஜமெளலி கூறியிருப்பதாவது:

"ஈகோ என்பதை பல நேரங்களில் பல விதமாகப் புரிந்து கொள்ளலாம். ஈகோ வேறு, ஆணவம் வேறு. ஒரு நடிகரால் என் படத்தில் நடிக்க முடியவில்லை என்றால், நடிக்க வேண்டாம் என்று நினைத்தால் என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு கதையை எழுதும்போது ஒரு சில நடிகர்கள் உங்கள் மனதில் இருப்பார்கள். அவர்களை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பீர்கள்.

அந்த குறிப்பிட்ட நடிகரை நாம் அணுகும் வரை அந்தக் கதையை அவரை மனதில் வைத்தே நாம் தொடர்ந்து கற்பனை செய்வோம். நாம் அவர்களை ஏற்கனவே அந்த அளவு மனதில் வைத்திருப்பதால் அவர்கள் முடியாது என்று சொல்லும்போது அது கண்டிப்பாக ஏமாற்றமாக இருக்கும். ஆனால் என் அதிர்ஷ்டம் இதுவரை நான் என் கதாபாத்திரங்களுக்குச் சரியான நடிகர்களையே நடிக்க வைத்திருக்கிறேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE