படம் வெற்றி பெறவில்லை; பயணித்ததில் மகிழ்ச்சி: 'புதிய கீதை' இயக்குநர்

By செய்திப்பிரிவு

படம் வெற்றி பெறவில்லை என்றாலும் பயணித்ததில் மகிழ்ச்சி என்று 'புதிய கீதை' இயக்குநர் ஜெகன் தெரிவித்துள்ளார்.

2003-ம் ஆண்டு ஜெகன் இயக்கத்தில் விஜய், மீரா ஜாஸ்மின், அமிஷா படேல், கலாபவன் மணி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'புதிய கீதை'. விஸ்வாஸ் சுந்தர் தயாரித்த இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்தார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

ஜெகன் இயக்கிய முதல் படமே 'புதிய கீதை' தான். அதைத் தொடர்ந்து 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' மற்றும் 'என் ஆளோட செருப்பை காணோம்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும், பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது முன்னணி இயக்குநர்கள் இயக்கும் படங்களின் கதை விவாதத்தில் பங்கேற்று வருகிறார்.

இன்று (மே 8) தான் இயக்குநர் ஜெகன் அறிமுகமான 'புதிய கீதை' வெளியான நாளாகும். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பதிவில் இயக்குநர் ஜெகன் கூறியிருப்பதாவது:

"உச்ச நட்சத்திரம், நேரம் தவறாமை, எளிமை, உண்மை இதுதான் விஜய் சார். உங்கள் ரசிகன் இயக்குநரானேன். படம் வெற்றி பெறாவிட்டாலும் உங்களோடு பயணித்த 2 வருடமும் மகிழ்ச்சியானதே. நன்றி".

இவ்வாறு இயக்குநர் ஜெகன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE