மக்களால் 'விசாரணை' படத்தின் வன்முறையைக் கையாள முடியவில்லை: இயக்குநர் வெற்றிமாறன்

By செய்திப்பிரிவு

மக்களால் 'விசாரணை' படத்தின் வன்முறையைக் கையாள முடியவில்லை என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். 'பொல்லாதவன்' தொடங்கி சமீபத்தில் அவருடைய இயக்கத்தில் வெளியான 'அசுரன்' படம் வரையில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருக்கும். அதை மிகவும் யதார்த்தமாகக் காட்சிப்படுத்தியிருப்பார்.

இதையே வெற்றிமாறன் மீது பலரும் குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளனர். அதற்கு அவரும் பலமுறை பதிலளித்துள்ளார். தற்போது 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூட சினிமாவில் காட்டப்படும் வன்முறைக் காட்சிகள் குறித்து வெற்றிமாறன் பேசியிருப்பதாவது:

"வன்முறையைத் தூக்கிப் பிடிக்காத வரையில் எனக்கு அதில் பிரச்சினையில்லை. ஆனால் என்ன பிரச்சினையென்றால் வன்முறை மறைமுகமாக அல்லாமல் உயர்த்திக் காட்டினால்தான் இந்த உலகம் அதை ஏற்கிறது.

மக்களால் 'விசாரணை' படத்தின் வன்முறையைக் கையாள முடியவில்லை. ஆனால், சூப்பர் ஹீரோ படங்களின் வன்முறை அவர்களுக்குப் பிரச்சினையில்லை. வன்முறையைப் பார்க்கும்போது இயற்கையாக பயம் தான் வர வேண்டும். ஒருவரை அடிப்பதைப் பார்த்து சந்தோஷப்படக்கூடாது".

இவ்வாறு வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

'அசுரன்' படத்தைத் தொடர்ந்து, சூரி நடிக்கவுள்ள படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தை இயக்கவுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE