டுவேய்ன் ஜான்ஸன், எமிலி ப்ளண்ட் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜங்கிள் க்ரூஸ்’. படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டு இந்த ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் டுவேய்ன் ஜான்ஸன், எமிலி ப்ளண்ட் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். சூப்பர் ஹீரோ வகை திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்துக்கு ‘பால் அண்ட் செயின்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டு ஸ்காட் லாட்பெல் என்பவர் எழுதிய ‘பால் அண்ட் செயின்’ என்ற சூப்பர் ஹீரோ காமிக்ஸை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் கதையை ஆஸ்கர் விருது பெற்ற எமிலி வி.கார்டன் எழுதவுள்ளார்.
சூப்பர் ஹீரோ சக்திகளைக் கொண்ட ஒரு திருமணமான தம்பதியைப் பற்றிய கதையே இப்படம். இப்படத்தை டுவேய்ன் ஜான்ஸனின் செவன் பக்ஸ் மற்றும் எமிலி ப்ளண்ட் ஆகியோருடன் இணைந்து ஹிராம் க்ரேசியா, கெவின் மிஷர் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
» விஜய் படம் கிடைத்ததில் மகிழ்ச்சி: தமன்
» பிளாஸ்டிக்கின் தீமை குறித்து என் குழந்தைகளுக்கு உணர்த்துகிறேன்: கரண் ஜோஹர்
இப்படத்துக்கான விநியோக உரிமைக்காக நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடம் படக்குழுவினர் பேசி வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நிறுவனத்திடமும் இப்படத்தின் உரிமை விற்கப்படவில்லை.