ரசிகருக்கு கரோனா பாதிப்பு: தொலைபேசியில் நலம் விசாரித்த சிம்பு

By செய்திப்பிரிவு

ரசிகருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரிடம் தொலைபேசியில் நலம் விசாரித்துள்ளார் சிம்பு.

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு.

மேலும், படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தால் திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். சமூக வலைதளத்தில் பலரும் கரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். சமூக வலைதளத்தில் ஏற்பட்ட சர்ச்சையால் சிம்பு அனைத்திலுமிருந்து விலகிவிட்டார்.

'மாநாடு' படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால், சிம்பு வீட்டிலேயே இருக்கிறார். சிம்புவின் தீவிர ரசிகரான கடலூரைச் சேர்ந்த இளைஞர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைக் கேள்விப்பட்ட சிம்பு, உடனடியாக அவரிடம் நலம் விசாரித்தார். ''விரைவில் குணமாகி வீடு திரும்புவீர்கள், கவலை வேண்டாம். நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்'' என்று ரசிகரிடம் சிம்பு தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE