தனது ஒவ்வொரு படமுமே வெற்றியடைவதன் பின்னணி: ராஜமெளலி பதில்

By செய்திப்பிரிவு

தனது ஒவ்வொரு படமுமே வெற்றியடைவதன் பின்னணி குறித்து இயக்குநர் ராஜமெளலி பதிலளித்துள்ளார்.

'பாகுபலி' படங்களின் வெற்றியால் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் ராஜமெளலி. அந்தப் படங்களுக்கு முன்னதாக அவர் இயக்கிய அத்தனை படங்களுமே பெரும் வரவேற்பைப் பெற்றவைதான். எந்தவொரு படமும் தோல்வி, சுமாரான வெற்றி என்று சொல்லவே முடியாது. அவருடைய பல படங்கள் வெவ்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளன.

கரோனா அச்சுறுத்தல் காலத்தில் பல்வேறு முன்னணி இணையதளங்களுக்கு நேரலையில் பேட்டி கொடுத்து வருகிறார் ராஜமெளலி. அதில் "உங்களுடைய ஒவ்வொரு படமும் வெற்றி. மற்ற இயக்குநர்களிலிருந்து நீங்கள் எப்படி வித்தியாசப்படுகிறீர்கள்? கடவுள் கருணை என்று சொல்லாதீர்கள்" என்ற கேள்விக்கு இயக்குநர் ராஜமெளலி கூறியிருப்பதாவது:

"இல்லை. படத்தின் வெற்றிக்குக் கடவுளின் கருணை காரணம் என்று சொல்லமாட்டேன். ஆனால், ஒவ்வொரு இயக்குநரும் வித்தியாசமாகச் செயல்படுபவர். யாரையும் யாரோடும் ஒப்பிட முடியாது. எல்லோருமே உழைப்பவர்கள்தான். அதில் வித்தியாசம் எதுவும் இல்லை. உழைக்கும் முறை ஒவ்வொரு இயக்குநருக்கும் வேறுபடும். நான் கற்ற அடிப்படைகளை நான் தொடர்ந்து பின்பற்றுகிறேன்.

ஒரு சுவாரசியமான கதை தோன்றுகிறது, அதைப் படமாக உருவாக்குகிறோம். படத்தை உருவாக்கும்போது முதலில் நாம் எப்படி இந்தக் கதையை யோசித்தோமோ அதைத் தொலைத்து விடக்கூடாது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைப்பைப் போட வேண்டும். உங்கள் மனதில் இருக்கும் கற்பனையைச் சரியாகக் காட்சிகளாகக் கொண்டு வர முயல வேண்டும். அது எப்போதுமே நடக்காது. ஆனால் அதற்காக முழு முயற்சியைச் செய்ய வேண்டும்.

எனது பலம் என்ன என்று கேட்டால், பொறுமைதான் என் பலம். அவ்வளவு சீக்கிரம் பொறுமையிழக்க மாட்டேன். நினைத்த விஷயத்தைக் கொண்டு வர தொடர்ந்து முயன்றுகொண்டே இருப்பேன்".

இவ்வாறு ராஜமெளலி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE