என்னை மீண்டும் 90-களுக்கு எடுத்துச் செல்லுங்கள்: போலி கணக்குகள் தொடர்பாக ஸ்வாதி ரெட்டி வேதனை

By செய்திப்பிரிவு

என்னை மீண்டும் 90-களுக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று தனது பெயரில் உலவி வரும் போலி கணக்குகளுக்கு ஸ்வாதி ரெட்டி வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழில் 'சுப்பரமணியபுரம்', 'வடகறி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஸ்வாதி ரெட்டி. ஆகஸ்ட் 2018ல் இவர் மலேசியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த விமான ஓட்டி விகாஸ் வாசு என்பவரை மணந்தார்.

சமீபத்தில் கணவரை பிரிந்துவிட்டார் என்று வெளியான வதந்திக்குக் கூட சூசகமாக மறுப்பு தெரிவித்திருந்தார். தற்போது அவருடைய பெயரில் உலவிவரும் போலி ட்விட்டர் தளம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்வாதி ரெட்டி கூறியிருப்பதாவது:

"ஒரு வாரம் கழித்து இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு வந்தேன். @SwathiReddyOffl என்ற ட்விட்டர் பக்கம் என்னுடையது அல்ல. நான் ட்விட்டரில் இல்லை. எப்போதும் வர மாட்டேன். நான் ஃபேஸ்புக்கிலும் இல்லை. 2011-ம் ஆண்டே அந்த கணக்கை நீக்கிவிட்டேன். ஒரு பக்கம் இருக்கிறது ஆனால் அதை வேறொருவர் நிர்வகிக்கிறார். அது இப்போது செயல்படவில்லை. நான் ஏன் இன்னமும் இன்ஸ்டாகிராமில் இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை இந்த விஷயத்தைச் சொல்ல உதவியாய் இருப்பதனால் என்று நினைக்கிறேன்.

(போலிக் கணக்கை பற்றி) என் கவனத்துக்குக் கொண்டு வந்தவர்களுக்கு நன்றி. இந்தக் கணக்கு மீண்டும் மீண்டும் என் கவனத்துக்கு வந்து கொண்டே இருக்கிறது. (நீங்கள் யார் தலைவரே?) உங்களிடம், ட்விட்டரும், சக்தியும் இருந்தால் அந்த கணக்கைப் பற்றி புகார் அளியுங்கள். கடந்த காலத்தில் என்னைப் பற்றி என்ன பதிவு இடப்பட்டிருக்கிறது என்பதைக் கட்டுப்படுத்த என்னிடம் எந்த அதிகாரமும் இல்லை. இது முக்கியமும் இல்லை, பெரிய விஷயமும் இல்லை, இப்போது நான் முக்கியமானவளும் இல்லை. ஆனால் வீட்டில் இருக்கும் எனக்கு இந்த போலிகள் சோர்வைத் தருகின்றன.

அசலாக என்னாலேயே இணையத்தில் இருக்க முடியாமல் போகும்போது எப்படி ஒருவருக்கு என்னைப் போல போலித்தனமாக இணையத்தில் இருக்கும் அளவுக்குப் பொறுமை இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை.

கணக்குகள், கட்டுரைகள், பதிவுகள், உறவுகள், தோற்றங்கள், நேர்மறை எண்ணங்கள் என எல்லாவற்றிலும் போலித்தனம். என்னை மீண்டும் 90-களுக்கு எடுத்துச் செல்லுங்கள். ஒரு லேண்ட்லைன் உரையாடலே தரமானதாக இருந்தது. மழையால் மட்டுமே மின்சாரம் போனது. சின்ன ஐஸ்க்ரீம், முட்டை பஃப் போதும் நண்பர்களுடன் உரையாட, பொழுதுபோக்குக்கு தூர்தர்ஷன் மட்டுமே போதுமானதாக இருந்த காலம் அது"

இவ்வாறு ஸ்வாதி ரெட்டி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE