ரஜினி செய்த உதவியால் தயாரிப்பாளர் சங்கத்தில் சர்ச்சை: தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு

கே.ராஜன் வேண்டுகோள் விடுத்து ரஜினி செய்த உதவியால், தயாரிப்பாளர் சங்கத்தில் சர்ச்சை வெடித்துள்ளது.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால் உதவி இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், தினசரித் தொழிலாளர்கள், தினசரி நடிகர்கள், நாடக நடிகர்கள் எனப் பலரும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள். இதில் ரஜினி பல்வேறு சங்கங்களுக்கு அரசி மூட்டை மற்றும் மளிகைப் பொருட்களை அனுப்பி வைத்தார். அப்போது தயாரிப்பாளர் கே.ராஜன் ரஜினிக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கும் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ரஜினியும் 750 பேருக்கு உதவும் வகையில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார். இதை வைத்து தயாரிப்பாளர்களுக்கு உதவத் தொடங்கினார்கள். இது சர்ச்சையாக வெடித்தது. பல்வேறு தயாரிப்பாளர்கள் நாம் முதலாளிகள், பலரும் நம்மிடம் சம்பளம் வாங்குகிறார்கள். நாம் எப்படி இவ்வாறு வரிசையில் நின்று வாங்கலாம் என்று கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ், "எல்லோருக்கும் சம்பளம் கொடுத்த திரையுலக முதலாளிகள் தயாரிப்பாளர்கள். இன்று ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசிப் பையை வாங்க கொளுத்தும் வெயிலில் வரிசையில் நிற்க வேண்டுமா? இதை வாங்கிக்கொண்டு வந்தால் எவ்வளவு கவுரவக் குறைச்சல். சின்ன பட்ஜெட் படம் எடுக்கவே ஒரு கோடி ரூபாய் செலவு செய்கிறோம். ஆயிரம் ரூபாய் அரிசிக்கு வெளியில் நிற்க வேண்டுமா?

தொழிலாளர்கள் அவர்கள் சங்கத்தினர் வழங்கிய அரிசியை வரிசையில் நின்று வாங்கி வந்துள்ளனர். அவர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வேறுபாடு என்ன இருக்கும்? தயாரிப்பாளர்களுக்கு ரஜினி உதவ விரும்பினால், லாரன்ஸ் போல் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கலாம்" என்று தனது ஆடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், சில தயாரிப்பாளர்களும் ரஜினியின் உதவிக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து வந்தார்கள்.

இதனிடையே இன்று (மே 7) காலை '6.2' படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களில் ஒருவரான பழனிவேல் தயாரிப்பாளர் சங்கத்துக்குச் சென்று கடும் வாக்குவாதம் செய்தார். ரஜினி கொடுத்த பொருட்களை எப்படி வரிசையில் நின்று வாங்கலாம் என்று கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பழனிவேல் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"ரஜினியின் பெயரைச் சொல்லி கே.ராஜன் சார், நமக்கு எல்லாம் அரிசி கொடுக்கிறேன் என்று காறித் துப்பிவிட்டார். நாம் சுமார் 150 ஆட்களுக்கு முதலாளி. நாமெல்லாம் அரிசி வாங்கலாமா?. வெறும் 850 ரூபாய் பெறுமானம் உள்ள பொருட்களை நமது கே.ராஜன், ரஜினி பெயரைச் சொல்லி தயாரிப்பாளர் சங்கத்தை அசிங்கப்படுத்திவிட்டார். எந்தத் தயாரிப்பாளர் அரிசி இல்லை என்று கேட்டார். நாம் எல்லாம் முதலாளிகள். இப்போது தான் தயாரிப்பாளர் சங்கத்தில் போய் திட்டிவிட்டு வருகிறேன். இந்த அரிசியை வாங்குபவர்கள் எல்லாம் தயாரிப்பாளர்களே அல்ல".

இவ்வாறு பழனிவேல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE