வேலை, உறவுகள் என அனைத்தையும் இழந்துவிட்டேன்: பாலியல் குற்றச்சாட்டுக்குப் பின் முதன்முதலாக வாய்திறந்த கெவின் ஸ்பேசி

By செய்திப்பிரிவு

ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேசி பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி தண்டனை பெற்ற பிறகு அது தன் வாழ்வை எப்படிப் புரட்டிப் போட்டது என்பது குறித்து முதல் முதலில் வாய் திறந்துள்ளார்.

'அமெரிக்கன் பியூட்டி’, ’செவன்’, 'யூசுவல் சஸ்பெக்ட்ஸ்', 'பேபி டிரைவர்', 'சூப்பர்மேன் ரிட்டர்ன்ஸ்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் கெவின் ஸ்பேசி. கடந்த 2017 ஆம் ஆண்டு சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு அதற்கான தண்டனை பெற்றார். அதனைத் தொடர்ந்து பலரும் அவர் மீது தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்தனர். இதனால் அவர் நடித்துக் கொண்டிருந்த பல திரைப்படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார்.

அதன் பிறகு திரைப்படங்கள், பொது நிகழ்ச்சிகள், பேட்டிகள் என எதிலும் தலைகாட்டாமல் இருந்தார் கெவின் ஸ்பேசி. இந்நிலையில் ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்ற கெவின் இது குறித்து முதன்முதலாக வாய் திறந்துள்ளார்.

அந்த நிகழ்வில் அவர் பேசியதாவது:

''அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. என்னுடைய உலகமே ஒட்டுமொத்தமாக மாறிவிட்டது. என்னுடைய வேலை, என்னுடைய உறவுகள், திரைத்துறையில் எனக்கான இருப்பு என அனைத்தையும் சில மணிநேரங்களில் இழந்துவிட்டேன்.

பொதுவாகப் பிறரிடம் அவர்களுடைய நிலைமையைப் புரிந்து கொள்கிறேன் என்று நான் சொல்வதில்லை. ஏனென்றால் ஒருவருடைய நிலையை நாம் அவர்களின் இடத்தில் இருந்தால் மட்டும்தான் புரிந்துகொள்ளமுடியும்.

ஆனால், இந்தச் சம்பவத்தில் என்னால் ஒருவருடைய உலகம் எப்படி திடீரென்று இயங்குவதை நிறுத்தும் என்று புரிந்துகொள்ள முடிகிறது. அதே போல திடீரென் நம்மிடம் வந்து ‘நீங்கள் இனிமேல் நடிக்கமுடியாது’ என்றோ அல்லது ‘உங்களுக்கு வேலை போகப் போகிறது’ என்றோ கூறுவது எப்படி இருக்கும் என்பதையும் நான் உணர்கிறேன். அந்தச் சூழல் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்காது''.

இவ்வாறு கெவின் ஸ்பேசி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE