ஊரடங்கு காலத்தில் நடிப்பு கற்றுக்கொள்ளும் சமந்தா

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகள், நிகழ்வுகள், நிறுத்தப்பட்டுள்ளன.

திரையரங்கங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் தங்கள் அன்றாட நிகழ்வுகளைத் தொடர்ந்து வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் பதிவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை சமந்தா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி பிரபல பிரிட்டிஷ் நடிகை ஹெலன் மிர்ரெனிடம் நடிப்பு கற்று வருகிறார்.

இதுகுறித்து சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''ஆயிரம் மணிநேரங்களில் ஒரே ஒரு மணிநேரம் ஆக்கபூர்வமானதாக இருந்தாலும் கூட அதை நாம் காட்டிக் கொள்ளவேண்டும். நான் இப்போது சிறந்த நடிகையாகப் போகிறேன். அதைக் காத்திருந்து பாருங்கள். இல்லையென்றால் இந்தப் பதிவை நீக்கி விடுவேன்''.

இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல நடிகையான ஹெலன் மிர்ரென் 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘ஆண்டனி அண்ட் கிளியோபாட்ரா’ நாடகத்தின் மூலம் புகழ்பெற்றவர். சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வாங்கியவர். தற்போது மாஸ்டர் க்ளாஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் ஆன்லைனில் நடிப்பு பயிற்றுவித்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE