நடிகை மீரா சோப்ராவின் தந்தையை புதுடெல்லியின் போலீஸ் காலனி பகுதியில் கத்தி முனையில் மிரட்டி திருடிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தமிழில் 'அன்பே ஆருயிரே' திரைப்படத்தின் மூலம் நிலா என்ற பெயரில் அறிமுகமாகியவர் நடிகை மீரா சோப்ரா. 'மருதமலை', 'ஜாம்பவான்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர். மீராவின் தந்தை மாலை நடைபயிற்சி செய்து கொண்டிருக்கும் போது சிலர் வந்து அவரை மிரட்டித் திருடியதாக மீரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"என் தந்தை போலீஸ் காலனியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். ஸ்கூட்டரில் வந்த இருவர் கத்தியைக் காட்டி அவரை மிரட்டி அவரது மொபைலைப் பறித்துக் கொண்டனர். இதுதான் டெல்லியின் பாதுகாப்பு நிலை" என்று டெல்லி காவல்துறை, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரைக் குறிப்பிட்டு பகிர்ந்திருந்தார். தனது புகாரின் எஃப்.ஐ.ஆர் எண்ணையும் இன்னொரு ட்வீட்டில் பகிர்ந்துள்ளார்.
பின்னர் வடக்கு டெல்லியின் காவல்துறைக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ள மீரா, "உடனடி நடவடிக்கை எடுத்த வடக்கு டெல்லி காவல்துறைக்கு நன்றி. நம் காவல்துறையால் பாதுகாக்கப்படும் போது பெருமையாக இருக்கிறது. எது திருடு போனது என்பது முக்கியமல்ல. நமது வீட்டுப் பெரியவர்களைப் பாதுகாப்பதுதான் மிக முக்கியம். டெல்லி காவல்துறைக்கு என் வணக்கங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
» நிரந்தர மதுவிலக்கு அறிவிப்பீர்கள் என எதிர்பார்த்தேன் அய்யா: இயக்குநர் சேரன்
» மது யாருடைய அத்தியாவசிய தேவை? - டாஸ்மாக் திறப்பு தொடர்பாக கமல் காட்டம்