கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ம்தேதி நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது இந்த ஊரடங்கு 3-ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அதன் ஒருபகுதியாக, வைரஸ் பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் அனைத்து நகரங்களில் மதுபானக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை பற்றிய அக்கறை துளியும் இன்றி அனைவரும் முண்டியடித்தனர்.
இந்நிலையில் மதுபானக் கடைகளை திறக்க அனுமதியளித்த அரசின் முடிவுக்கு இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்ட கண்டனப் பதிவுகள் பின்வருமாறு:
நடிகர் பவன் கல்யாண்: ஆபத்தான இந்த சூழலில் சமூக இடைவெளி சாத்தியமில்லை என்பதால் எல்லா கோயில்களும், மசூதிகளும், தேவாலயங்களும் மூடப்பட்டுள்ளன. ஆனால் மதுக்கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற முடியவில்லை என்றாலும் அவற்றை திறப்பது சரியா?
» விரைவில் 'எக்ஸ்ட்ராக்ஷன்' இரண்டாம் பாகம் - ஜோ ருஸ்ஸோ உறுதி
» மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் தொடக்கம்? - இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு விளக்கம்
நடிகை பூஜா பட்: நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி, மன அழுத்தம் மற்றும் உடல்,மன பிரச்சினைகளின் உண்மை நிலையை அறியாத ஒர் சமூகத்துக்கு போதையே வடிகாலாக மாறுகிறது. நிச்சயமின்மையுடன் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மதுபாட்டில்களே புகலிடமாகின்றன. நீங்கள் அதை சரிசெய்யவேண்டுமென்றால், முதலில் அவர்களுடைய வலியை போக்குங்கள்.
இயக்குநர் ஹன்ஸல் மேத்தா: அத்தியாவசிய பொருட்களை வாங்க மார்கெட்டுக்கு சென்றேன்.
1. மதுக்கடைகளின் வெளியே பெரும் கூட்டம். கூச்சலாக இருந்தது.
2. கடும் போக்குவரத்து நெரிசல்.
3. எல்லா கடைகளிலும் மக்கள் கூட்டம். சமூக இடைவெளி இல்லை.
4. இந்த முட்டாள்தனத்தில் மத்தியில் காவல்துறை செய்வதறியாது நிற்கிறது.
இந்த ஊரடங்கு தளர்வு தலைகீழாக போய்விட்டதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.
நடிகர் ரோஹித் ராய்: மதுவுக்காக மக்கள் ஏன் இப்படி சாலைகளில் திரிகிறார்கள். அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால்தான் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பலனளிக்கவில்லை. முட்டாள்தனமாக இருக்கிறது.