சம்பளத்தை விட்டுக்கொடுத்த ‘பிரம்மாஸ்த்ரா’ படக்குழுவினர்? - கரண் ஜோஹர் விளக்கம்

அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிரம்மாஸ்த்ரா'. தர்மா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் இப்படத்தை மூன்று பாகங்களாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் வேலைகள் பாதியில் நின்றுள்ளன. இதனால் இந்த ஆண்டு வெளியாகவிருந்த இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள ரன்பீர், ஆலியா மற்றும் இயக்குநர் அயன் ஆகியோர் தங்கள் சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து படக்குழுவினரிடம் ரசிகர்கள் பலரும் தொடர்ந்து கேள்வியெழுப்பி வந்தனர்.

இந்தத் தகவலுக்கு இயக்குநர் கரண் ஜோஹர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கரண் ஜோஹர் கூறியுள்ளதாவது:

''எங்கள் கூட்டுமுயற்சியில் உருவாகும் இப்படங்கள் குறித்து ஊடக நண்பர்கள் எந்தவித முன்முடிவுகளையும் எடுக்கவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கடினமான சூழலில் இதுபோன்ற தவறான தகவல்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும். தயவுசெய்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருக்கவும்''.

இவ்வாறு கரண் ஜோஹர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE