'மாயவன்' எங்கோ கொண்டாடப்படுவதில் மகிழ்ச்சி: சி.வி.குமார்

'மாயவன்' எங்கோ கொண்டாடப்படுவதில் மகிழ்ச்சி என்று தயாரிப்பாளரும், இயக்குநருமான சி.வி.குமார் தெரிவித்துள்ளார்

2017-ம் ஆண்டு தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குநராக அறிமுகமான படம் 'மாயவன்'. சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்திருந்தார்.

இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. பெரும் பொருட்செலவில் உருவான படம் என்பதால், சி.வி.குமாருக்கு நஷ்டமும் ஏற்பட்டது. தற்போது இந்தப் படத்தின் இந்தி டப்பிங் யூடியூப் பக்கத்தில் 25 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர்.

இதனால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார் சி.வி.குமார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"25 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் யூடியூபில் 'மாயவன்' இந்திப் பதிப்பை பல நேர்மறையான பின்னூட்டங்களுடன் பார்த்துள்ளனர். இது யூடியூபில் மிகப்பெரிய ஹிட். இந்த ஊரடங்கின்போது மாயவனை அமேசானில் பார்த்துவிட்டுப் பலரும் கால் செய்தும், மெசேஜ் செய்தும் பாராட்டினார்கள். என்னுடைய படம் எங்கோ கொண்டாடப்படுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது".

இவ்வாறு சி.வி.குமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE