டாஸ்மாக் திறப்பது ஆபத்தான யோசனை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

By செய்திப்பிரிவு

டாஸ்மாக் திறப்பது ஆபத்தான யோசனை என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட் மூலம் கரோனா பரவல் அதிகமாகியுள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாகவே கரோனா தொற்றின் எண்ணிக்கை தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அதிகரித்து வருகிறது.

இதனிடையே, தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கரோனா தொற்று அதிகரித்து வரும் சமயத்தில், டாஸ்மாக் திறப்பு அவசியம்தானா எனக் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தற்போது இது தொடர்பாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

"கரோனா தொற்று இருப்பவர்கள் அதிகரித்து வரும் இந்த வேளையில் டாஸ்மாக்கை மீண்டும் திறப்பது ஆபத்தான யோசனையாக இருக்கிறது. இன்னும் பெரிய குழப்பத்துக்கு இட்டுச் செல்லலாம். முதல்வரே, தயவுசெய்து இதை ஒத்திப்போடுவதைப் பற்றி பரிசீலனை செய்யுங்கள்".

இவ்வாறு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சென்னையில் கரோனா தொற்று அதிகமாக இருப்பதால், இங்கு மட்டும் டாஸ்மாக் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE