மீண்டும் இயக்குநராகும் ராமராஜன்: விஜய் சேதுபதியை அணுக முடிவு

தான் எழுதி வைத்திருக்கும் கதையை விஜய் சேதுபதியை வைத்து இயக்க ராமராஜன் முடிவு செய்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். மதுரையிலிருந்து சென்னை வந்து ராம நாராயணனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து 1985-ம் ஆண்டு 'மண்ணுக்கேத்த பொண்ணு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

அதற்குப் பிறகு 'மருதாணி', 'ஹலோ யார் பேசுறது', 'மறக்க மாட்டேன்', 'சோலை புஷ்பங்கள்' ஆகிய படங்களை இயக்கினார். பின்பு 'நம்ம ஊரு நல்ல ஊரு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்பு, தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்து முன்னணி நாயகனாக வலம் வரத் தொடங்கினார்.

பின்பு 1996-ம் ஆண்டு 'அம்மன் கோவில் வாசலிலே', 1997-ம் ஆண்டு 'நம்ம ஊர் ராசா', 'கோபுர தீபம்', 'விவசாயி மகன்' ஆகிய படங்களை இயக்கினார். இறுதியாக 2012-ம் ஆண்டு 'மேதை' படத்தில் நாயகனாக நடித்தார். அதுவே, அவர் நடிப்பில் வெளியான கடைசிப் படமாகும்.

அதற்குப் பிறகு திரையுலகில் சரியான வாய்ப்புகள் அமையாமல் இருந்தார். அதிமுக கட்சியில் சேர்ந்து, தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டார். தற்போது மீண்டும் திரையுலகில் இயக்குநராகவுள்ளார். கதையை முழுமையாக எழுதி வைத்திருப்பதாகவும், அந்தக் கதைக்கு விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் என்பதால் விரைவில் அவரை அணுகவுள்ளார் ராமராஜன். இந்தக் கதையில் எந்தவொரு காட்சியிலுமே தலைகாட்டாமல், வெறும் இயக்குநர் பொறுப்பை மட்டுமே கவனிக்க ராமராஜன் முடிவு செய்துள்ளார்.

நடிகர் ராமராஜன் - நடிகை நளினி இருவருமே காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். பின்பு கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றனர். இந்தத் தம்பதியினருக்கு அருண், அருணா என்ற (இரட்டையர்கள்) மகனும், மகளும் இருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE