ஷாரூக் கானின் அலுவலகம் கரோனா பாதித்தவர்களுக்காக எப்படி மாற்றப்பட்டது? வீடியோ வெளியீடு

By ஐஏஎன்எஸ்

ஷாரூக் கானின் அலுவலகம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக எப்படி மாற்றப்பட்டுள்ளது என்ற வீடியோவை அவரது மனைவி கவுரி கான் வெளியிட்டுள்ளார்.

கரோனா தொற்று இருப்பவர்களைத் தனிமைப்படுத்தலில் இருக்க நடிகர் ஷாரூக் கான், மும்பையில் இருக்கும் தனது 4 மாடி அலுவலகக் கட்டிடத்தை மும்பை மாநகராட்சிக்கு தற்காலிகமாகக் கொடுத்தார். அந்த இடம் எப்படி மாற்றப்பட்டுள்ளது என்கிற வீடியோவை ஷாரூக் கானின் மனைவி கவுரி கான், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தப் பணியை கவுரி கான் நடத்தும் கவுரி கான் டிசைன்ஸ் நிறுவனமும், மீர் அறக்கட்டளையும் சேர்ந்து முடித்துள்ளது. மீர் அறக்கட்டளை பகிர்ந்துள்ள வீடியோவுடன், "ஒவ்வொருவருக்குமான இடத்தை உருவாக்கியுள்ளோம். கவுரி கான் மற்றும் ஷாரூக் கான் கொடுத்த 4 மாடி அலுவலகக் கட்டிடத்தை மீர் அறக்கட்டளை, மாநகராட்சியின் வழிகாட்டுதலுடன் தனிமைப்படுத்தலுக்கான இடமாக வெற்றிகரமாக மாற்றியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது

"எனது டிசைன்ஸ் நிறுவனம் அலுவலகத்தை மாற்றியமைத்தது. இந்த தனிமைப்படுத்தலுக்கான இடம், தேவை இருப்பவர்கள் சேவை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இங்கு உள்ளன. கோவிட்-19க்கு எதிரான இந்தப் போராட்டத்தில் நாம் சேர்ந்து, வலிமையாக நிற்க வேண்டும்" என்று கவுரி கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்தக் கட்டிடத்தில் 22 படுக்கைகள், பாதுகாப்பான இடைவெளியில் போடப்பட்டுள்ளன. இதுதவிர ஷாரூக் கான், அவரது மனைவி, ஷாரூக்கின் நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பிலிருந்தும் கோவிட்-19 நெருக்கடியைச் சமாளிக்க நிறைய நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE