உலக சுகாதார மைய இயக்குநருடனான உரையாடல் ரத்து: தீபிகா படுகோன் தகவல்

By ஐஏஎன்எஸ்

உலக சுகாதார மையத்தின் இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதனாம் உடனான உரையாடல் இப்போதைக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.

கரோனா நெருக்கடி காலத்தில் மனநலம் பேணுவது குறித்து, உலக சுகாதார மைய இயக்குநருடன் நடிகை தீபிகா படுகோன் உரையாடுவதாக இருந்தது. இந்த உரையாடல் பற்றி ஏப்ரல் 19 அன்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தவிர்க்க முடியாத சூழலின் காரணமாக இந்த உரையாடல் இப்போதைக்கு ரத்தாகியுள்ளதாக தீபிகா கூறியுள்ளார்.

"ஏப்ரல் 23, 2020 அன்று, 'நோய்த்தொற்றின் போதும், அதற்குப் பிறகும், மனநலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்' என்ற தலைப்பில் உலக சுகாதார மைய இயக்குநர் டாக்டர் டெட்ரோஸுடன் நான் பேசவிருந்த உரையாடல், தவிர்க்க முடியாத சூழ்நிலையால் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில், இதுபோன்ற சூழலில், மனநலம் என்பது மிக மிக முக்கியமான, உண்மையான ஒரு அங்கம். இது போன்ற அசாதாரண நிலையிலும், அதற்குப் பின்னரும் நாம் அதற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேணுவோம் என நம்புகிறேன்" என்று தீபிகா பகிர்ந்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு, தீபிகா படுகோன் மன அழுத்தத்தால் பதிக்கப்பட்டார். அதிலிருந்து மீண்ட பிறகு தொடர்ந்து மனநல ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தி வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE