இந்தியாவில் டிவி பார்ப்பவர்களின் எண்ணிக்கை 40% சதவீதம் உயர்வு

ஊரடங்கு காலத்தில் டிவி பார்ப்பவர்களின் எண்ணிக்கை 40% சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், பிரபலங்கள் என அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் டிவி பார்ப்பவர்களின் எண்ணிக்கை 40% சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் (BARC) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் டிவி பார்ப்பவர்களின் எண்ணிக்கை 40% சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் மும்பை, டெல்லி போண்ற பெருநகரங்கள் முன்னிலையில் உள்ளன. இதில் 16% பார்வையாளர்கள் 15 முதல் 21 வயது இளைஞர்களாக இருக்கின்றனர்.

முதல்கட்ட ஊரடங்கோடு ஒப்பிடுகையில் தற்போது மும்பையில் சராசரி தொலைக்காட்சி பார்க்கும் நேரம் 1 மணி நேரம் 42 நிமிடங்களாகவும், டெல்லியில் 1 மணிநேரம் 26 நிமிடங்களாகவும் அதிகரித்துள்ளது. செய்தி சேனல்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மும்பையில் 251 சதவீதமும் டெல்லியில் 177 சதவீதமும் அதிகரித்துள்ளது.

திரைப்படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நகரங்களில் 82 சதவீதமும் கிராமங்களில் 69 சதவீதமும் அதிகரித்துள்ளது.

இந்தி பேசும் மாநிலங்களில் செய்தி சேனல்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 15 வாரங்களில் 200 சதவீதமாக அதிகரித்துள்ளது''.

இவ்வாறு ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் (BARC) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE