'சாஹோ' இயக்குநர் சுஜித்தின் இயக்கத்தில் நடிக்குமாறு ராம்சரணுக்கு பரிந்துரை செய்துள்ளார் பிரபாஸ்.
சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப், மந்த்ரா பேடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சாஹோ'. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியானது.
விமர்சன ரீதியாக இந்தப் படம் கடும் எதிர்வினைகளைச் சந்தித்தது. ஆனால், போட்ட முதலீட்டைத் திரும்ப எடுத்துவிட்டது படக்குழு. இந்தப் படத்துக்குப் பிறகு இயக்குநர் சுஜித்தின் அடுத்த படம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தது. இறுதியாக, சிரஞ்சீவி நடிக்கவுள்ள 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்கினை இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இதற்காக திரைக்கதையை மாற்றியமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார் சுஜித்.
இந்தக் கூட்டணி உருவாகியிருப்பதற்குக் காரணமே பிரபாஸ் தான் என்கிறார்கள். என்னவென்றால், சுஜித்திடம் நல்ல கதையிருக்கிறது. அதைக் கேட்கும்படி ராம்சரணுக்கு பரிந்துரைச் செய்துள்ளார் பிரபாஸ். உடனடியாக ராம்சரண் - சுஜித் சந்திப்பு நடந்துள்ளது.
அப்போது, "பிரபாஸ் உங்களைப் பற்றிக் கூறினார். ஆனால், ராஜமெளலி இயக்கத்தில் நடித்துவருவதால் அந்தப் படம் முடிந்தால் தான் உங்களிடம் கதைக் கேட்டு தேதிகள் ஒதுக்க முடியும். எனக்கு அந்தப் படம் எப்போது முடியும் என்று தெரியவில்லை. நான் தான் 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக் வாங்கியுள்ளேன். நீங்கள் வேண்டுமானால் அதை இயக்குங்களேன்" என்று கூறியுள்ளார் ராம்சரண். இதனைத் தொடர்ந்தே சுஜித்தும் 'லூசிஃபர்' ரீமேக்கை இயக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
சிரஞ்சீவி படம் என்றவுடன் குஷியாக ஒப்புக் கொண்டு, பரபரப்பாக பணிகளைத் தொடங்கிவிட்டார் சுஜித்.