கோவிட்-19 நெருக்கடியால் நிலவும் ஊரடங்கில், மற்ற மாநில மொழி திரைத்துறைகளைப் போலவே மலையாள திரைத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு முடிந்து மீண்டும் பணிகள் தொடங்கும் போது, நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் 50% குறைவாகச் சம்பளம் பெற வேண்டும் என்ற தயாரிப்பாளர் சங்கம் கோரியுள்ளது.
ஈஸ்டர், ரம்ஜான் தினங்களில் கிட்டத்தட்ட 7 மலையாள படங்கள் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் ஊரடங்கால் அது சாத்தியப்படவில்லை. மேலும் 26 படங்கள் தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் முடங்கியுள்ளன.
"மீண்டும் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் ஊரடங்கு முடிந்து, துறை பாதிப்பிலிருந்து மீள வெண்டும் என்றால், நடிகர்களும், கலைஞர்களும் அவர்களது சம்பளத்தைக் குறைக்க வேண்டும். பேருக்குக் குறைப்பது உதவாது. குறைந்தது 50 சதவீதம் குறைத்துக் கொள்ள வேண்டும்" என்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் குமார்.
ஊரடங்கு முடிந்ததும் இது குறித்து துறையின் மற்ற பிரிவுகளில் இருப்பவர்களிடமும் கலந்து பேசி, எதிர்காலத்துக்கான திட்டம் தீட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரள திரையுலகில், மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் தான் அதிக சம்பளம் பெறுகின்றனர். இவர்களைத் தொடர்ந்து ப்ரித்விராஜ், திலீப் உள்ளிட்ட நடிகர்கள் அடுத்த இடங்களில் உள்ளனர்.