இதுபோன்ற பல இரத்தினங்களை நீங்கள் உருவாக்க வேண்டும்: ஹலிதா ஷமீமைப் பாராட்டிய சாய் பல்லவி

By செய்திப்பிரிவு

இது போன்ற பல இரத்தினங்களை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று 'சில்லுக் கருப்பட்டி' படம் தொடர்பாக ஹலிதா ஷமீமை பாராட்டியுள்ளார் சாய் பல்லவி

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன், ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சில்லுக் கருப்பட்டி'. சூர்யாவின் 2டி நிறுவனம் இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றி, சக்திவேலன் வழியே வெளியிட்டது.

விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் பலரும் பாராட்டினார்கள். மேலும், பல்வேறு விருதுகள் வழங்கும் விழாவிலும் இயக்குநர் ஹலிதா ஷமீமுக்கு விருது கிடைத்தது.

தற்போது கரோனா ஊரடங்கால் பல்வேறு பிரபலங்கள், பார்க்காத படங்களை எல்லாம் பார்த்து அது குறித்த கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, 'சில்லுக் கருப்பட்டி' படத்தைப் பார்த்துப் பாராட்டியிருந்தார்.

அவரைத் தொடர்ந்து சாய் பல்லவியும் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக இயக்குநர் ஹலிதா ஷமீம் "ஊரடங்கு பெரும்பாலான நேரம் எனக்கு மன அழுத்தத்தைத் தருகிறது. அந்த நேரத்தில் தேவதை எனக்குச் செய்தி அனுப்பினார்" என்று ட்வீட் செய்து சாய் பல்லவி அனுப்பிய குறுஞ்செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"வணக்கம் ஹலிதா, படம் பார்த்து முடித்ததும் நானும் என் பெற்றோரும் உணர்ச்சி மிகுதியில், மகிழ்ச்சியை உணர்ந்தோம். உங்களுக்காக நான் சந்தோஷப்படுகிறேன். எங்களைச் சந்தோஷப்படுத்தியதற்கு நன்றி. இது போன்ற பல இரத்தினங்களை நீங்கள் உருவாக்க வேண்டும். உங்களுக்கு நிறைய அன்பும், பிரார்த்தனைகளும்"

இவ்வாறு ஹலிதா ஷமீமின் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE