விஜய் மகன் சஞ்சய் நாயகனாக அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது மகன் சஞ்சய். இவர் ஏற்கனவே ஒரு குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார். தற்போது கனடாவில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு இவரால் கரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியாவுக்குத் திரும்ப முடியவில்லை என்று விஜய் வேதனையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு சஞ்சய் பாதுகாப்பாக இருப்பதாக விஜய் தரப்பு தெரிவித்தது.
தற்போது இந்த வதந்தி முடிந்திருக்கும் நிலையில், அடுத்த வதந்தி தொடங்கியுள்ளது. என்னவென்றால் தெலுங்கு சுகுமார் எழுதி, தயாரித்திருக்கும் படம் 'உப்பெனா'. இதில் நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இதில் நாயகிக்கு அப்பாவாக ராயாணம் என்கிற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தின் வெளியீடு கரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி கைப்பற்றி இருப்பதாகவும், இதில் நாயகனாக விஜய் மகன் சஞ்சய் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'மாஸ்டர்' படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி நடித்திருப்பதால், இந்த வதந்தி என்று பலரும் நம்பினார்கள். தமிழ் ரீமேக்கிலும் விஜய் சேதுபதியே வில்லனாக நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இது தொடர்பாக விஜய் தரப்பில் விசாரித்த போது, "இந்தச் செய்தியில் உண்மையில்லை. சஞ்சய் நாயகனாக நடிக்கவுள்ளார். ஆனால், அது இப்போது இல்லை. அவரது படிப்பு அனைத்தும் முடிந்தவுடன் நடக்கலாம். அது சஞ்சய்யின் முடிவில் தான் இருக்கிறது" என்று தெரிவித்தார்கள்.