திரையுலக வாழ்க்கையில் ரஜினியை பின்பற்றுகிறாரா சிரஞ்சீவி என்று பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
ரஜினியின் திரையுலக வாழ்க்கையைப் பொறுத்தவரையில், முதலில் தனக்கு நெருங்கிய நண்பர்களாக இருக்கும் இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்து வந்தார். ஆனால், இதர இயக்குநர்களிடம் ஆர்வமாகக் கதைகள் மட்டுமே கேட்டுவந்தார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான 'லிங்கா' திரைப்படம் தோல்வியைத் தழுவியது.
இதற்குப் பிறகு தான் இளம் இயக்குநர்கள் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார். இயக்குநர் பா.இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், சிவா என பட்டியல் நீண்டு வருகிறது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் விரைவில் இணையவுள்ளார் என்று தகவல் வெளியானது.
புதிய இயக்குநர்கள் கதாபாத்திரத்தை எப்படிச் சிந்திக்கிறார்கள் என்பதே இதன் பின்னணி. தற்போது இதே பாணியை நடிகர் சிரஞ்சீவியும் கையில் எடுத்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் காலத்தில் வீட்டில் இருந்துக் கொண்டே நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் என பேட்டிகள் கொடுத்து வருகிறார் சிரஞ்சீவி.
» 'தி பேட்மேன்' வெளியீடும் தள்ளிப்போகிறது: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
» அற்புதமானது; உன்னதமானது: விஜயகாந்த் அறிவிப்புக்கு பவன் கல்யாண் பாராட்டு
இதில் ஒரு பேட்டியில் சிரஞ்சீவி, "எனக்கே என்னைத் திரையுலகில் புதிதாகப் பார்க்க வேண்டும் எனத் தோன்றுகிறது. இளம் இயக்குநர்கள் தான் தன்னை புதுமையான முறையில் சிந்தித்து கதைகளை உருவாக்குவார்கள். ஆகையால் தான் சுஜீத், மெஹர் ரமேஷ், பாபி உள்ளிட்ட இயக்குநர்களின் படங்களில் நடிக்கவுள்ளேன். பழைய ஒயின் புதிய பாட்டில் இருப்பது அழகாக இருக்கும். அதற்கு நான் கண்டிப்பாக இளம் இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்தால் தான் நடக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பேட்டியின் பின்னணியில் யோசித்துப் பார்த்தால், அவரும் ரஜினியின் பாணியைக் கையில் எடுத்திருப்பதாகவே தெரிகிறது.