இதுபோன்ற சமூகத்தில் வாழ்கிறோம் என்பதற்கு வெட்கப்பட வேண்டும்: குஷ்பு காட்டம்

இது போன்ற ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் என்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும் என்று குஷ்பு காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைப் பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினர். பின்னர் மருத்துவரின் உடல் காவல்துறை உதவியுடன் புதைக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் தங்களுடைய வேதனையை பகிர்ந்துள்ளனர். தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நாம் எப்படி மாறிக்கொண்டிருக்கிறோம்? நம் சக மனிதர்களின் உயிர்களைக் காப்பாற்ற ஒருவர் தன் உயிரை விட்டிருக்கிறார். படிப்பறிவில்லாத அல்லது ரவுடிகள் அல்லது குண்டர்கள், எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள், அந்தக் கூட்டம் தடுத்துள்ளது.

இது போன்ற ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் என்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும். அவரிடம், அவர் குடும்பத்திடமும் நாம் மன்னிப்பு கோர வேண்டும். மரணம் மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு மனிதரும் உரித்தானவரே. ஆனால் அதை அவரது ஆன்மாவுக்கு நாம் செய்யவில்லை. என்றும் நாம் குற்ற உணர்வுடன் இருப்போம்"

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

சில தினங்களாகவே குஷ்பு ட்விட்டர் தளத்தில் பிரச்சினை இருந்தது. இதனால் ட்விட்டர் பக்கத்துக்கு வராமல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்விட்டர் பக்கத்தில் உள்ள பிரச்சினை தொடர்பாக பகிர்ந்திருந்தார். தற்போது அவரது ட்விட்டர் பக்கம் சரியாகி, மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE