பெண் குழந்தைக்கு தந்தையானார் ஜி.வி.பிரகாஷ்

By செய்திப்பிரிவு

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதியினருக்குப் பெண் குழந்தை பிறந்தது.

தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். 'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், பல்வேறு ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். சமீபத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அசுரன்' இவருடைய இசையமைப்பில் வெளியான படம் தான்.

தன்னுடன் பள்ளியில் படித்து, பாடகியாக வலம் வந்த சைந்தவியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜி.வி.பிரகாஷ். கணவரின் இசையமைப்பில் பல பாடல்களைப் பாடியுள்ளார் சைந்தவி.

2013-ம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி திருமணம் நடைபெற்றது. 2019-ம் ஆண்டு சைந்தவி கர்ப்பமானார். கரோனா ஊரடங்கில் இருக்கும் சமயத்தில் நேற்றிரவு (ஏப்ரல் 19) சைந்தவிக்கு வலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது.

மனைவியும், குழந்தையும் நலமாக இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜி.வி.பிரகாஷுக்கு தமிழ்த் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE