சல்மான் கான் எழுதிப் பாடியுள்ள ‘பியார் கரோனா’ பாடல் வெளியாகியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள், பிரபலங்கள் என அனைத்துத் தரப்பினரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். சிலர் என்ன செய்வதென்று தெரியாமல் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் தினமும் ஏதேனும் வீடியோ அல்லது புகைப்படம் உள்ளிட்டவற்றைப் பதிவேற்றி வருகின்றனர்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த சில தினங்களுக்கு முன் தனது ‘பீயிங் சல்மான்கான்’ என்ற யூடியூப் சேனலைத் தொடங்கினார்.
இந்நிலையில் தான் எழுதிப் பாடியுள்ள ‘பியார் கரோனா’ என்ற இந்திப் பாடலை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.
ஹூசைன் தலால் என்பவருடன் இணைந்து சல்மான்கான் எழுதியுள்ள இப்பாடலுக்கு சாஜித்- வாஜித் இசையமைத்துள்ளனர்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள திரையுலகைச் சேர்ந்த தினக்கூலிப் பணியாளர்களுக்கு உணவுப் பொருட்கள், தொடர் நிதியுதவி ஆகியவற்றை சல்மான்கான் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.