கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைக்க எதிர்ப்பு: விவேக் வேதனை

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலைப் புதைக்க எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பாக விவேக் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (ஏப்ரல் 19) கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைப் பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினர். பின்னர் மருத்துவரின் உடல் காவல்துறை உதவியுடன் புதைக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரோனா நோய்த்தொற்று எதிர்ப்புப் போரில் முன் படைவரிசை வீரர்கள் எனப் போற்றப்படும் மருத்துவர்கள் மரணத்துக்கு மரியாதை தராமல் இதுபோன்ற விழிப்புணர்வு இல்லாத செயலில் ஈடுபடும் சிலரால் மனிதாபிமானம் சிதைக்கப்படுவதாகத் தலைவர்கள் பலரும், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நடிகர் விவேக் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"ஒரு மருத்துவர் இறந்தால் கூட அவரை அடக்கம் பண்ணுவதற்குக் கூட காவல்துறை பாதுகாப்பு தேவைப்படும் சூழல் இன்று இருக்கிறது. ரொம்ப வருத்தமாக இருக்கிறது. மருத்துவர் சைமன் கோவிட் -19 வைரஸ் தொற்றினால் இறந்திருக்கிறார். பல பேருக்கு சிகிச்சை அளித்து, அதன் மூலம் அவருக்கு வைரஸ் தொற்று வந்து இறந்துள்ளார். அவரது உடலை எடுத்துக்கொண்டு போய் கீழ்ப்பாக்கத்திலும் அடக்கம் பண்ண முடியவில்லை. அண்ணா நகரிலும் அடக்கம் பண்ண முடியவில்லை.

எங்கு பார்த்தாலும் மக்கள் தகராறு பண்ணுகிறார்கள். ஏனென்றால் அந்தத் தொற்று பரவிவிடுமோ என்று பயப்படுகிறார்கள். சில மருத்துவ உண்மைகள் அவர்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கரோனா வைரஸ் இறந்த உடலில் இருக்காது. அது பரவாது. அந்த உடலை எரித்தாலும், புதைத்தாலும் யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் இல்லை. இதைச் சரியான தரவுகள் மூலம் தெரிந்துகொண்டு, நிறைய மருத்துவர்களிடம் கேட்டுவிட்டுத்தான் உங்களுக்குச் சொல்கிறேன். யாரும் அப்படிப் பயப்பட வேண்டாம்.

சாதாரண மனிதர்களைக் கூட அவ்வாறு அவமதிப்பு செய்யக்கூடாது. இறந்த பிறகு பண்ணவே கூடாது. மருத்துவர்கள் எல்லாம் இப்போது நடமாடும் தெய்வங்கள். அவர்களை நாம் மதிக்க வேண்டும். இருக்கும்போது கொண்டாடவில்லை என்றாலும் இறந்தவுடன் அவமானப்படுத்தாமல் இருக்க வேண்டும். அவருக்காகப் பிரார்த்திப்போம். அவருடைய குடும்பத்தினருக்கு இது பெரிய மன வருத்தத்தை அளித்திருக்கும். அவர்களுக்காகவும் பிரார்த்திப்போம். மனிதநேயத்தைக் காப்போம்".

இவ்வாறு விவேக் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE