என்னைப் புகழ்வது என் நம்பிக்கைக்கு ஆபத்தானது: ஸாய்ரா வாசிம் பதிவு

தன்னை யாரும் புகழ வேண்டாம் என்றும், அது தனது நம்பிக்கைக்கு ஆபத்தானது என்றும் ஸாய்ரா வாசிம் கூறியுள்ளார்.

நடிகை ஸாய்ரா வாசிம், 'தங்கல்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். தொடர்ந்து 'சீக்ரெட் சூப்பர்ஸ்டார்' படம் இந்தியாவில் மட்டுமல்லாது சீனாவிலும் இவரைப் பிரபலமாக்கியது. ஆனால் கடந்த வருடம் திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகுவதாகவும், அது தனது நம்பிக்கை மற்றும் மதத்துக்குக் குறுக்கே வருவதாகவும் காரணம் கூறியிருந்தார். இவர் கடைசியாக நடித்த படம் 'தி ஸ்கை இஸ் பின்க்'. இந்தப் படத்தில் ப்ரியங்கா சோப்ரா, ஃபர்ஹான் அக்தர் ஆகியோர் நடித்திருந்தனர்.

வெள்ளிக்கிழமை அன்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸாய்ரா, தன்னைப் புகழ வேண்டாம் என்று தனது ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். இது தனது நம்பிக்கைக்கு ஆபத்தானது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அந்தப் பதிவில், "என் மீது மக்கள் பொழியும் அன்பை நான் அங்கீகரிக்கிறேன். ஆனால் என்னைப் புகழும் வார்த்தைகள் எதுவும் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்பதைக் கூறிக்கொள்கிறேன். அது எனக்குப் பெரிய சோதனையாகவும், எனது நம்பிக்கைக்கு ஆபத்தாகவும் உள்ளது. நான் பலரும் நம்புவதைப் போல அவ்வளவு நேர்மையானவள் கிடையாது.

என்னை யாரும், எப்படியும் புகழ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். அதற்குப் பதிலாக எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். அல்லா, விரல் விட்டு எண்ணக் கூட முடியாத எனது எண்ணற்ற குறைகளை மன்னித்து, என் மனதில் இருக்கும் வெற்றிடத்தை அவரது கருணை ஒளியால் நிரப்பி, எனது நம்பிக்கையை வளர்த்து, தவறுகளைத் திருத்தி, பயன்படக்கூடிய அறிவைத் தந்து, அவரை என்றும் நினைக்கும் இதயத்தையும், வார்த்தைகளையும் தந்து, அவருக்காக மட்டுமே சரியான காரியங்களைச் செய்ய, உறுதியாக இருக்க, நான் ஒரு முஸ்லிமாக வாழ்ந்து, சாக அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸாய்ரா திடீரெனப் பகிர்ந்திருக்கும் இந்தப் பதிவு பாலிவுட் வட்டாரத்தில் பலரை யோசிக்க வைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE